லூசிபர்:
அந்த மாபெரும் ஸ்பின்னிங் மில் தனது அசுரத்தனமான இரும்பு
கேட்டினைப் பூட்டியிருந்தது. அதன் அருகில் கொஞ்சம் தள்ளி குடிசை வேயப்பட்ட சிறிய
டீக்கடையின் முன்பு பெருங்கூட்டமாக தொழிலாளர்கள் நின்றிருந்தனர். லூசிபர்
டீக்கடையிலிருந்து ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டார். அதன் மீது தாவி ஏறி நின்று தனது
தொங்கும் மீசையை வருடியபடி பேசினார்.
“அன்பார்ந்த தோழர்களே, இதோ இதுதான் முதலாளித்துவம்...”
பூட்டியிருந்த கேட்டினை நோக்கி கையை நீட்டியபடி சொன்னார், “...நம்முடைய
எலும்புகளால் எழுப்பப்பட்ட கேட்டுகளால் நம்மையே வெளியேற்றும். நம் ரத்தம் பூசி
எழுப்பப்பட்ட செங்கல் சுவர்கள் நம்மை பிரித்திருக்கும். எஃகாய் பிணைந்த நம்
நரம்புகளால் ஆன வேலிகளால் நம்மை குத்திக் கிழிக்கும். இந்த அரசாங்கமும் போலிசும்
என்றாவது தொழிலாளிகளுக்கு பாதுகாப்பளித்திருக்கிறதா, என்றாவது போலிசின் துப்பாக்கி
சுரண்டித்தின்னும் முதலாளிகளைக் குறிவைத்திருக்கிறதா? ஆனால் தோழர்களே நமக்கான நாள்
பிறக்கும். நம்முடைய அரசாங்கம், நம் தலைமையில், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்
பிறக்கும். அன்று புதிய வரலாறு நம் கையால், இன்றைய ஆளும் வர்க்கத்தின் ரத்ததாலான
மையால் எழுதப்படும். அதுதான் நமக்கான, பாட்டாளி வர்க்கத்துக்கான உண்மையான
விடுதலை... இன்குலாப் ஜிந்தாபாத்...“ லூசிபர் பேசுவதற்கு ஒலிப்பெருக்கிகள் எதுவும்
தேவையில்லை. சுற்றிலுமிருந்த தொழிலாளர்கள் அவ்வப்போது கோஷங்கள் இடுவதைத்தவிர தங்கள்
மூச்சுக்காற்று காதுகளில் ஒலிக்குமளவு அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். பேசி
முடித்து அனைவரும் கோஷங்களை எழுப்பியபடி மில்லின் கேட்டினை நோக்கி சென்றனர்.
அப்போது போலிஸ் இவர்களைத் தடுக்க முயன்று சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்படியே
அது தடியடியாக மாறி போலிஸ் கண்மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கியது. லூசிபர்
இடக்கண்ணுக்கு மேல் புருவத்தில் பெரிய ரத்தக்காயத்துடன் மயங்கி விழுந்தார்.
பத்துபேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிதறி ஓடியவர்களின் அடியையும் விழுந்து
கிடந்தவர்கள் மீது ஆத்திரம் கொண்டமட்டும் செலுத்திவிட்டு காக்கி கும்பல்
மில்லுக்குள் நுழைந்தது.
கெயின்:
கெயினின் வக்கீல் அலுவலகம் வழக்கமான பரபரப்புகளை
விடுத்து அமைதியாக இருந்தது. கெயின் தலையைக் குனிந்தபடி எழுதிக்கொண்டிருக்க அவரது
முன்பு ஜானும் ஜேக்கப்பும் இரும்பு நாற்காலியின் அமர்ந்திருந்தனர். “தோழர் ஜான்..”
என்று சிறிய இடைவெளி விட்டு அவரின் ‘சொல்லுங்க தோழ’ருக்காக காத்திருந்தவர்,
“...சேலத்துல பிரான்ஸிஸ் அண்ட் சன்ஸ்னு ஒரு மில்லுல லூசிபர்னு நம்ம தோழர் ஒருத்தரை
போலிஸ் அடிச்சுட்டாங்க. நீங்க என்ன பண்ணுங்க நம்ம யூனியன் லேபருங்க கிட்ட சொல்லி
கொஞ்சம் நிதி திரட்டி ஒரு போஸ்டர் அடிச்சுருங்க. அப்படியே ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு
ஏற்பாடு பண்ணிடுங்க.” என்றார்.
“சரிங்க தோழர்..” என்றார் பவ்யமாக.
“அப்படியே பிரஸ் மேட்டர் எழுதிருக்கேன், எடுத்துட்டு
போய் டைப் பண்ணிட்டு வந்துடுங்க.”
“சரிங்க தோழர், நாளைக்கே ஆர்ப்பாட்டம் வெச்சுடலாமா?”
“நாளைக்கு வெள்ளிக்கிழமைங்க. கவரேஜ் இருக்காது. திங்கள் கிழமை
வெச்சாதான் மீடியா வருவாங்க. திங்கள்கிழமையே வெச்சுடுங்க.”
“சரி கிளம்புங்க”
லூசிபர்:
லூசிபர் வீட்டுக்கு வரும்போது வீட்டிற்குள் வீட்டு
உரிமையாளர் அமர்ந்திருந்தார். தோளில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த லூசிபரின்
மனைவி நான்சியிடம் அறிவுரை சொல்வதுபோல் எதோ சொல்லிக்கொண்டிருந்தார். லூசிபர் உள்ளே
நுழையவும் பேச்சை நிறுத்திவிட்டு “வாப்பா. எப்படி இருக்க? காயமெல்லாம்
பரவால்லியா?” என்றார். லூசிபர் புன்னகைத்தபடி பதிலளித்தாலும் அவன் மனதுக்குள்
எதற்காக வந்தார் என்று குருகுறுத்தபடியிருந்தது. “தம்பிக்கு குடிக்க ஏதாவது
குடும்மா” என்று நான்சியிடம் சொன்னார். நான்சி கொண்டுவந்த தண்ணீரைக்
குடித்துவிட்டு, “என்னங்கய்யா இந்தப் பக்கம்? இன்னும் மாசம் பொறக்கலிங்களே”
என்றார்.
“அது வந்து தம்பி...” என்று கொஞ்சம் தயங்கித் தயங்கியே
வீட்டுக்காரர் பேசினார். “...உன்ன எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். நம்ம
சாதிக்காரன். எந்த வம்புதும்புக்கும் போக மாட்டேன்னு நம்பிதான் வீட்டை வாடகைக்கு
விட்டேன்” என்றார்.
“நான் யார் கிட்டயும் எந்த வம்புதும்புக்கும்
போகலீங்களே” என்றார் லூசிபர்.
“நீ போகலதான், இருந்தாலும்...” என்று இழுத்தார்.
“எதுவாருந்தாலும் சொல்லுங்கய்யா” என்று பட்டென்று
கேட்டார் லூசிபர்.
“நேத்திக்கு நம்ம மொதலியார் சங்க கூட்டம் நடந்துச்சு.
உனக்குத்தான் தெரியுமே. அதுல உனக்கு யாரும் வீடு வாடகைக்கு குடுக்கக் கூடாதுன்னு
சொல்லி தீர்மானம் போட்டுட்டாங்கப்பா” என்றார்.
லூசிபர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்.
“நானும் எவ்வளவோ கேட்டுப் பாத்துட்டேன்பா. பாவம்
கைப்புள்ளைய வெச்சுருக்கான். நல்ல பையன் நான் வேணும்னா பேசிப்பாக்குறேன்னு. ஆனா
அவங்க கேக்கவேயில்லை. எல்லா மில்லுக்காரங்களும் சேந்துக்கிட்டாங்க அதுபோக சங்கத்துக்கு
பிரான்ஸிஸ் அய்யாதான பொருளாளரு, அவர எதுத்துக்கிட்டு என்ன பண்ண முடியும் நீயே
சொல்லு”
லூசிபர் இறுகிப்போன முகத்துடன் சொன்னான், “சரிங்கய்யா
என்னால உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வேண்டாம். நான் ஒரு ரெண்டு மாசத்துல காலி
பண்றேன்.”
“அது வந்து... இன்னும் ஒரு வாரத்துல காலி பண்ண
வைக்கணும்னு சொல்லிட்டாங்க தம்பி”
சொந்த சாதியை பகைத்துக்கொள்ளாதவன் என்ன புரட்சியாளன்
என்று லூசிபர் நினைத்துக்கொண்டார்.
கெயின்:
“நம்ம கெயின் தோழர் இருக்காருல்ல, என்ன ஆளுங்க
தெரியுமா?” என்றார் ஜான்.
“தெரியுமே, அவுங்க பிராமின்ஸ்” என்றார் ஜேக்கப்.
“இப்படி இருந்து நம்ம கூட வந்து வேலை பாக்குறது எவ்வளவு
பெரிய விஷயம் தெரியுமா?”
“அப்படியா?”
“இல்லையா பின்ன. அவுங்க சாதிக்காரங்களையே
பாப்பானுங்கன்னு பேசுவாரு”
“பாரேன்”
“அது மட்டுமா? அவங்க பூணூலு போடுவாங்கல்ல”
“ஆமா”
“அதை அறுத்துட்டுதான் கட்சிக்கே வந்தாரு”
“அவரு வீட்டுல ஒன்னும் சொல்லலியோ”
“அதெல்லாம் யாருக்கு தெரியும், எப்படியும் தள்ளி
வெச்சுருப்பாங்க”
“அய்யய்யோ”
“சொந்த சாதியவே பகைச்சுக்குற அளவு கட்சியில ஈடுபாடுய்யா.
கெயின் தோழர்னா சும்மாவா”
“இப்படியெல்லாம் ஒரு தோழர் நமக்கு கிடைக்கணுமே” என்றார்
ஜேக்கப். அவரை சுற்றி நின்றபடி டீ குடித்துக்கொண்டிருந்த நான்குபேரும்
உச்சுகொட்டியபடி ஆமோதித்தனர்.
லூசிபர்:
நான்சி ஒரு கையில் இறுக்கமாக மஞ்சப்பையைப் பிடித்தபடி
நடந்துகொண்டிருந்தார். ‘குழந்தை அழுதிருப்பாளோ’ என்று மனது படபடவென்று
அடித்துக்கொண்டிருந்தது. கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த புதிய மஞ்சள் கயிறுடன்
முந்தானைக்குள் மறைந்திருந்த தாலியை இறுக்கமாகப் பிடித்தபடி தனது நெஞ்சை ஆசுவாசப்
படுத்திக்கொண்டாள். கண்கள் கலங்கியபடியே இருந்தன. எப்போது வேண்டுமானாலும் அழுகையாக
வெடிக்கும் பிரளயத்துக்குக் கண்கள் தயாராகவேயிருந்தன.
“ஏங்க கோட்டை மாரியம்மன் அடகுக்கட எங்கங்க இருக்கு?”
என்று வெகுநேர தயக்கத்துக்குப் பின்னர் அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டார். அந்தப்
பெண் தன் கணவரிடம் கேட்க அவர் நான்சிக்கு வழி சொன்னார். வழி சொல்லும்போதே இருவரும்
நான்சியை பரிதாபமாகப் பார்த்ததாக நான்சிக்குத் தோன்றியது. அந்தப் பெண் நான்சியின்
மஞ்சள் கயிறு மட்டும் தொங்கும் கழுத்தினைப் பார்த்தது கண்டு அவசர அவசரமாய்க்
கேட்டுக்கொண்டு திரும்பி விருவிரென்று நடந்தார் நான்சி. கண்களில் வழிந்த நீரை
அவசரமாக முந்தானையால் துடைத்துக்கொண்டார்.
வீட்டைக் காலி செய்து ரெண்டு மாதங்கள் ஆனபிறகும் சரியான
வீடு கிடைத்தபாடில்லை. அம்மாப்பேட்டையில் பெரும்பாலும் முதலிமார்களின்
வீடுகள்தான். யாருமே சங்கத்தை மீறி இவர்களுக்கு வாடகைக்கு விடவில்லை. அதைவிட்டால்
பிராமணர்களும் சவுராஷ்ட்ராவினரும்தான் அவர்களும் இவர்களுக்கு வீடு வாடகைக்கு
விடவில்லை. எத்தனை நாட்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் குடியிருப்பது. எங்கே
போனாலும் போலிசும் சங்கத்து ஆட்களும் வந்து மிரட்டியபடியிருன்தனர். போலிசுக்குப்
பயப்படாதவர்கள்கூட சங்கத்தில் இருந்து ஆள் வந்ததும் வெளியேற சொல்லிவிடுவார்கள். ஒவ்வொருமுறையும்
சிறுத்துக்கொண்டிருந்த பண்டங்கள் அடங்கிய மூட்டையுடன் வேறெதுவும் நண்பர் வீட்டுக்கோ
சொந்தக்காரர் வீட்டுக்கோ மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தனர். கடைசியில் நான்கைந்து
வீடு மாறிய பிறகு கட்சிக்காரரின் உறவினர் மூலமாக ஒரு வழியாக வீடு வாடகைக்குக்
கிடைத்தது. அவர் எவரின் உருட்டல் மிரட்டலுக்கும் பயப்படவில்லை. ஆனால் இப்போது
பிரச்சினை வேறு வழியில் வந்தது.
அன்று “நெருப்புச்சுடர்” என்ற கட்சியின் பத்திரிக்கையைப்
படித்துக்கொண்டிருந்தார் லூசிபர். மெட்ராஸில் நடந்த தொழிற்சங்க போராட்டங்கள் பற்றி
எழுதியிருந்தது. ‘தொழிலாளர்கள் ஒரு ஷிப்ட் சம்பளத்தை இழந்து லாஸ் ஆப் பேயில் வந்து
போராட்டத்தில் கலந்துகொண்டனர்’ என்று எழுதியிருந்தது லூசிபர்க்கு சலிப்பூட்டியது.
சேலத்தில் எத்தனை போராட்டங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை இழந்து கலந்துகொண்டனர்.
எத்தனை கம்பெனிகள் காலவரையின்றி மூடப்பட்டன. அந்த தொழிலாளர்களெல்லாம்
சம்பளமின்றிதானே இன்றும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஏன் மெட்ராஸ்
தொழிலாளர்கள் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது? ஆசிரியராக கெயின்
இருப்பதால்தானோ என்று நினைத்துக்கொண்டார். புத்தகத்தில் வந்திருந்த முக்கால்வாசி
கட்டுரைகள் கெயினால் எழுதப்பட்டிருந்தன. லூசிபர் கூட தஞ்சை நாகையில் விவசாயத்
தொழிலாளர்கள் படும் சாதிய ஒடுக்குமுறைகளையும் அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணைக்க
தொழிற்சங்கம் செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் ஒரு கட்டுரை எழுதி
அனுப்பியிருந்தார். ஆனால் அது வெளிவரவில்லை. ஆனால் அரசியல் ஒன்றுமற்ற
வெற்றுச்செய்திகளும் மொழிபெயர்ப்புகளுமாய் நெருப்புச்சுடர் மாறிக்கொண்டு வருவதாக
லூசிபருக்குத் தோன்றியது.
அப்போது சீருடையணியாத இரண்டு போலீஸ்காரர்கள்
வீட்டுக்குள் நுழைந்தனர். இதுபோன்ற நிகழ்வு நான்சிக்கோ லூசிபருக்கோ புதியதல்ல.
மற்ற போலிஸ்கள் போலில்லாமல் இவர்கள் குழைந்து குழைந்து பேசுவது கண்டு
நான்சிக்குக்கூட இவர்களைப் பிடிக்கும். ஆனால் லூசிபர் இவர்களுடன் வெறுப்பாகவே
பேசுவான். வந்தவுடன் நான்சி, “வாங்கண்ணே” என்றார். இந்தமுறை வந்தவர்கள்
எப்போதும்போல குழைவாகப் பேசவில்லை, “லூசிபரு ஸ்டேஷன் வரைக்கும் போகணும் கிளம்பு”
என்றனர்.
“என்ன விஷயம்? எதுக்கு வரணும்?”
“ஏய், கிளம்புன்னா புரியாதா?” ஒருவர் சட்டையைப் பிடிக்க
இன்னொருவர் கையைப் பிடித்தார்.
“அய்யய்யோ அண்ணே” என்று பதறியபடி நான்சி ஓடி வர,
“இந்தாம்மா... பேசாம போ” என்று மிரட்டலாகக் கூறினர். “எதுவாருந்தாலும் ஸ்டேஷன்ல
வந்து பேசிக்க” என்று சொல்லிவிட்டு லூசிபரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றிக்கொண்டு
சென்றனர்.
பக்கத்து ஸ்டேஷன்க்கு சென்றபோது லூசிபர் அங்கே
அழைத்துவரப்படவில்லை. CBCIDக்கு செல்லும்படி சொன்னார்கள். நான்சி அதைக்
கேள்விப்பட்டதேயில்லை. இங்குமங்கும் அலைந்து கடைசியில் இரண்டு நாட்கள் கழித்து
கட்சிக்காரர்களுடன் சென்று உருட்டி மிரட்டி கேட்டதில் கடைசியில் கேஸ் நம்பரை எதுவோ
சொன்னார்கள். அதுவும் நான்சிக்குப் புரியவில்லை. கடைசியில் தோழர்கள் வெளியே வந்து
விவரமாக சொன்ன பிறகுதான் புரிந்தது. ஏதோவொரு மில் முதலாளிக்கு கொலை மிரட்டல்
விடுத்ததாக வழக்கு பதிந்திருக்கிறார்கள் என்று.
தோழமைக் கட்சி வக்கீல்கள் யாரும் தடை செய்யப்பட்ட
இயக்கத்தை சேர்ந்தவருக்கு ஆஜராக தயாராக இல்லை. மற்ற வக்கீல்கள் என்றால் பணம்
வேண்டுமே.
ஒரு வழியாக கோட்டை மாரியம்மன் அடகுக்கடையைக் கண்டுபிடித்தபோது
இன்னொருமுறை மஞ்சப்பையைத் தொட்டுப்பார்த்து அழுதுகொண்டாள்.
கெயின்:
“ஹலோ, எபிநேசரா? நான்தாண்ணா பெஞ்சமின் பேசறேன்.
சௌக்கியமா இருக்கேளா?... ஓ நேக்கென்ன.. பேஷா இருக்கேன். அப்பறண்ணா ஒரு ஹெல்ப்.
நம்ம ஜேம்ஸ் அண்ணா இருக்காரோன்னோ... ஆமாமா அவரேதான்... அவாளோட புள்ள ஒருத்தன்
கெயின்னு இருக்கான். அவன் கொஞ்சம் சேஷ்டை. லாயராதான் ப்ராக்டிஸ் பண்ணிண்டு
இருக்கான்... சிவில் இல்லண்ணா லேபர்... அதுல எதோ யூனியன் கீனியன்னு பழக்கம். அவன்
எதோ பீகார் கட்சிக்காரன். இவனை நன்னா மாட்டி விட்டுட்டான். பாவம் எதோ த்ரீ நாட் டூ
போட்டு விஜாரிக்கிறேன்னு அழைச்சுண்டு போயிருக்கா. நம்மவா நாலு பேரு போய் ஸ்டேஷன்ல
சொன்னா விட்டுடுவா. நீங்க வர வேண்டாம், சும்மா ஒரு போன் மட்டும் பண்ணுங்கோ. உங்க
ஜூனியர் ரெண்டு பேரை அனுப்பிநேள்னா. சும்மா ஒரு கூட்டம் காட்டத்தான். பண்றேளா.
ரொம்ப சந்தோஷம்ணா. ஸ்டேஷன் நம்பரா? சொல்லட்டுமா? குறிச்சுக்கறேளா... ஆங் ஆங்.. சரி...”
என்று நம்பரை சொல்லிவிட்டு போனை வைத்தார் பெஞ்சமின்.
“நீங்க ஒன்னும் வருத்தப்படாதேள்னா. ஒன்னும் ஆகாது
எல்லாரண்டையும் பேசிட்டேன் இந்நேரம் ஒரு இருவது போன் போயிருக்கும் ஸ்டேஷன்க்கு. அதுலயே
இன்ஸ்பெக்டர் பயந்துருப்பான். நான் நாலு ஜுனியரோட போய் அவனை அழைச்சுண்டு
வந்துடறேன்.”
“அதெல்லாம் நேக்கு கவலை இல்லை. கஷ்டப்பட்டு பிஎல்
படிச்சுட்டு உருப்படாம கட்சி கிட்சின்னு அலைஞ்சுண்டு இருக்கானேன்னுதான்.”
“அட விடுங்கோண்ணா, நம்ம ராபர்ட் இருக்கானே காலேஜ் படிக்கிறப்போ
நாஸ்திகம் பேசிண்டு திரிஞ்சான். நெஜமாண்ணா. நம்புவேளா? பூநூலெல்லாம் அறுத்து
போட்டுட்டு திகவுல சேந்துண்டு ஒரே ரகளை. இன்னொன்னு சொல்றேன் கேளுங்கோ... யாருக்கும்
தெரியாம மட்டனெல்லாம் தின்னான்னு கூட கேள்வி”
“சிவசிவா...” என்று தலையில் அடித்துக்கொண்டார் ஜேம்ஸ்.
“அப்பறமா ஒரு கல்யாணத்தைப் பண்ணினதும் அவன் ஆத்துக்காரி
அடியோட மாத்தலியா? எல்லாம் சரியாப் போயிடும்ணா கவலைப் படாதேள்”
சட்டை கசங்காமல் கெயின் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து
வெளியேறினார். கட்சியின் பெயரையும் கெயினின் பெயரையும் கோஷம் போட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை
அருகில் அண்டவிடாமல் வெள்ளைச்சட்டைகள் பார்த்துக்கொண்டன. ஜானை மட்டும் அருகில்
அழைத்த கெயின் அனைவரையும் அடுத்தநாள் ஆபீசில் வந்து பார்க்கச் சொன்னார்.
அந்த மாத நெருப்புச்சுடரில் தோழர் கெயினின் தியாகமும்
வழக்கு வரலாறும் கட்டுரையாக வெளியிடப்பட்டது.
லூசிபர்:
பிரான்ஸிஸ் அண்ட் சன்ஸ் மில் இழுத்து மூடப்பட்டது.
தொழிலாளர்களுக்கு இழப்புத்தொகை கேட்டு வழக்கு நடந்துகொண்டிருந்தது. தொழிலாளர்கள்
அனைவரும் வேறு மில்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். லூசிபர் போன்ற தொழிற்சங்க
முன்னணிகளுக்கு எந்த மில்லும் வேலை தரத் தயாராக இல்லை. லூசிபர் சொந்தமாக ஒரு தையல்
மிசின் வாங்கி தையல் தொழில் செய்யத் தொடங்கினார். அதுவும் மாலை நேரங்களில்
மட்டுமே. மற்ற நேரங்களில் கட்சி வேலையாக சென்றுவிடுவார். எவ்வளவு வேலை செய்தும்
அவர் மாநிலக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப் படவில்லை. நெருப்புச்சுடர் மீதான அவரது
காத்திரமான விமர்சனக் கடிதங்கள்தான் காரணம் என்று அரசல்புரசலாக பேசினாலும் லூசிபர்
அதைக் கண்டுகொள்ளவில்லை. அப்படியே வருடங்கள் ஓடின. லூசிபரின் குழந்தை கேத்தரின்
பள்ளி முடித்து கல்லூரியில் இணைந்திருந்தாள்.
கட்சிக்கென்ற தனி மாணவர் அமைப்பை உருவாக்க அவள்தான்
யோசனையை முன்வைத்தாள். லூசிபருக்கு பெருமை தாளவில்லை. அவளது விடாத முயற்சியால் பல
கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் கட்சிக்கு வந்தனர். பின்பு மாணவர்களை இணைத்து ஒரு
மாநாடு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் கட்சியின் மாணவர் அமைப்பினைத்
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக கட்சியின் மாவட்டக் குழு முடிவு முடிவு செய்தது. அது
குறித்த திட்டமிடல் கூட்டத்தில் பங்கெடுக்க மாநில செயலாளர் கெயின் வருவதாக முடிவு
செய்யப்பட்டது.
கெயின் எப்போதும் பிளைட்டில்தான் வருவார் எனினும்
மாணவர்கள் சம்பந்தமான கூட்டம் என்பதாலும், சேலத்தில் ஏர்போர்ட் இல்லை என்பதாலும் பெரியமனதுடன்
ரயிலில் பர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸியில் வந்துபோக சம்மதித்தார்.
“என்ன பேரு வைக்கலாம்னு இருக்கீங்க? உங்க மாணவர்
அமைப்புக்கு” என்றார் கெயின்.
“மாணவர் பேரவை தோழர்” என்றாள் கேத்தரின்.
“அதாவது... மாணவர் அமைப்பு மாநிலம் முழுவதும் இருந்தா
அப்படி வைக்கலாம். மாநிலம் முழுசும் இல்லையே. இப்போதைக்கு சேலம் மாணவர் பேரவைன்னு
வேணும்னா வைச்சுக்கோங்க”
“அப்படி சொல்ல முடியாதே தோழர், இதோ பீட்டர் மதுரை, UG
முடிஞ்சதும் அங்க போய்டுவாரு. இப்படி மாநிலம் முடிவதும் அமைப்பு வளருமே.”
“ஹஹஹா... மாணவர்கள் இன்னிக்கு இருப்பாங்க நாளைக்கு
படிச்சதும் ஓடிடுவாங்க. கட்சி இவங்கள நம்பியா நடக்குது. எத்தனை வருஷம்
பாத்துருக்கோம். இன்னிக்கு ஆர்வமா வருவாங்க நாளைக்கே போலிஸ் கேசுன்னு வந்தா
ஓடிடுவாங்க...” என்று தொடங்கி கெயின் வெகுநேரம் பேசினார்.
அதன்பிறகு மாணவர் பேரவைக்கு பெயர்வைக்க வேண்டிய அவசியம்
ஏற்படவில்லை.
கெயின்:
“மாணவர் அமைப்புதான் கட்சியின் இதயம். அந்த
இதயத்திலிருந்துதான் நம் கட்சிக்கு புது ரத்தம் பாயப்போகிறது. இதோ இந்த மெட்ராஸில்
கூடியிருக்கும்... ஓ பேரை மாத்திட்டாங்களோ... சென்னையில் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் நாளை லட்சங்களாக மாறப் போகின்றனர். அந்த லட்சங்கள்தான் நம் இலட்சியத்தை
உயர்த்திப் பிடிக்கும் பதாகைகள். இன்று இந்த அரங்கில் கூடியிருக்கும் அனைவரும்
புது வெள்ளமென கட்சிக்குள் பாய்ந்து புதிய அரசியல் நீரோட்டதினை உருவாக்கப்
போகிறார்கள்...” பெருமிதத்துடன் கெயின் பேசி முடித்தார். ‘மாணவர் இயக்கம்’ என்ற
பெயரில் புதியதாக தொடங்கப் பட்டிருந்தது. கெயினின் மகன் பார்திமியஸ்தான் அதன்
தலைவர் என்பதால் அது ஏன் ‘சென்னை மாணவர் இயக்கம்’ என்ற பெயர் வைக்கப்படவில்லை
என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது சென்னை மாணவர்
இயக்கம் கூட இல்லை. மொத்தம் 230 பேரில் கடலூரிலிருந்து 130 பேரும். தஞ்சையிலிருந்து
70 பேரும் வந்திருந்தனர். மீதமிருந்த 30 பேரில் பார்திமியஸுடன் வேலை பார்க்கும் வக்கீல்கள்
15 பேரும் ஆபீஸ் டைப்ரைட்டர்கள் 6 பேரும் பக்கத்து வீட்டு பள்ளி பாலகர்கள் 3
பேரும் போக 6 மாணவர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். எனவே சென்னை மாணவர்
இயக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சில வருடங்கள் கழித்து பிரான்ஸிஸ் அண்ட் சன்ஸ் வழக்கு
முடிவுக்கு வந்தது. தொழிலாளர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் கிடைத்தது. தொழிலாளர்களின்
இழப்பில் இருபதில் ஒரு பங்கு கூட பெறாது என்று புலம்பிக்கொண்டிருந்தனர் தொழிலாளர்களும் குடும்பத்தினரும். 130 பேரையும்
போன் செய்து அப்பாயிண்ட்மென்ட் வாங்கி சென்னைக்கு வந்து செக்கை
வாங்கிக்கொள்ளும்படி பார்திமியஸ் ஆணையிட்ட கடிதத்தினை தொழிலாளர்களுக்கு
அனுப்பினான்.
ஆளுக்கு 7 ஆயிரம் கொடுத்துவிட்டு செக்கினை வாங்கிக்கொள்ள
வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு லூசிபர் அதிர்ந்து போனான். இறந்துபோன
தொழிலாளர்களின் மனைவிகள் தங்கள் அவலநிலை சொல்லி புலம்பி அழுதும் கொஞ்சமும்
மனமிரங்கவில்லை. உருப்படியாக பிழைக்காமல் சங்கத்தை நம்பி வாழ்வை இழந்த தங்கள்
கணவன்களை சபித்தபடி அவர்கள் வெளியேறினார்கள்.
கோபத்துடன் லூசிபர் உள்ளே நுழைந்தார். “ஏம்பா கொஞ்சமும்
மனசட்சியில்லாம இப்படி எரியிற வீட்ல புடுங்கி திங்குறியே உனக்கு வெக்கமா இல்ல?”
“இங்க பாருங்க தோழர். தேவையில்லாம பேசாதீங்க. சும்மாவா
தராங்க? காசு வாங்குராங்கல்ல. யாரு கேஸு நடத்துறா? வேணும்னா நீங்க ரெண்டாயிரம்
கம்மியா குடுங்க. அவங்களுக்கு எதுக்கு தரணும்? என்ன கட்சிலையா இருந்தாங்க?”
“அடப்பாவி கட்சிய நம்பி வந்தவங்க அவங்க. எவ்ளோ பெரிய
தியாகம் பண்ணிருக்காங்க தெரியுமா கட்சிக்காக? இந்த பிச்சைக் காசெல்லாம்
என்னத்துக்கு. அவங்க வேலை பாத்திருந்தா எத்தனையோ லட்சம் சம்பாதிச்சிருப்பாங்க”
“அப்படிப் பாத்தா எங்கப்பா எவ்வளவு கோடி
சம்பாதிச்சிருப்பாரு. அவரு செஞ்ச தியாகமெல்லாம்...“ என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையிலிருந்த பேப்பர்களை அவன் முகத்தில் வீசிவிட்டு
லூசிபர் வெளியேறினார்.